ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த பாக்கியம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு, பாம்பன் தெற்குவாடி துறைமுக கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை 5 மணி அளவில் அந்த படகில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
உடனடியாக மீனவர்கள் பல்வேறு படகுகளில் சென்று தீயை அணைத்தனர். ஆனால் படகு முழுமையாக எரிந்துவிட்டது. படகில் தீப்பற்றியது எப்படி என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலில் படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு உண்டானது.