சாத்தூர்,
விருதுநகர் மாவட்டம் சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது 57). இவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த பட்டாசு தொழிற்சாலையில் 5-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இங்கு வழக்கம்போல் நேற்று காலை பணிகள் தொடங்கின. பட்டாசு உற்பத்திக்கு தேவையான மருந்துகளை கலக்கும் கலவை அறையில் வேலை நடந்து கொண்டு இருந்தது.
அப்போது திடீரென அங்கு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமாகி, தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
தொழிலாளி பலி
இந்த விபத்தில் சுந்தரகுடும்பன்பட்டியை சேர்ந்த சோலைவிக்னேஷ் (26) என்ற தொழிலாளி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வெடிவிபத்து குறித்து அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.