தமிழக செய்திகள்

குமுளி மலைப்பாதையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பெய்த மழைக்கு குமுளி மலைப்பாதையில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தொடர்ந்து 7-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதில் குமுளி மலைப்பாதையில் பழைய சோதனை சாவடி அருகே சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்தன. தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணி வகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜூனன் தலைமையில் வருவாய்த் துறையினர், வனத்துறையினர மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை வெட்டி அகற்றினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.