கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

நடனப் பயிற்சியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி நூற்றாண்டு விழாவிற்காக நடைபெற்ற நடனப் பயிற்சியின்போது மயங்கி விழுந்த சிறுமி உயிரிழந்தார்.

சென்னை,

நாமக்கல் மாவட்டம், குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா நடனப் பயிற்சியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், குமரமங்கலம் கிராமம், கவுண்டபாளையம் குடித்தெருவில் வசிக்கும் மாதேஸ்வரன் - தனலட்சுமி தம்பதியரின் மகள் ரக்ஷிதா (8 வயது) குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்றுவந்த நிலையில் கடந்த 08.02.2026 அன்று மறுநாள் நடக்கவிருந்த பள்ளியின் நூற்றாண்டு விழாவிற்காக நடைபெற்ற நடனப் பயிற்சியின்போது எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்து, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, 09.02.2026 பிற்பகல் 1.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read:'மை டியர் டாலி' - சினிமா விமர்சனம்