தமிழக செய்திகள்

ஐ.எஸ். அமைப்புக்கு பண உதவி கைது செய்யப்பட்ட வாலிபரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு பணம் வசூலித்து கொடுத்ததாக கைது செய்யப்பட்ட வாலிபரை சென்னைக்கு அழைத்து வந்து ராஜஸ்தான் மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு பணம் வசூலித்து கொடுத்ததாக கைது செய்யப்பட்ட வாலிபரை சென்னைக்கு அழைத்து வந்து ராஜஸ்தான் மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வாலிபர் கைது

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜமீல் முகமது என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் தொடர்பில் இருப்பதாக தெரியவந்தது.

இதன் அடிப்படையில் விசாரணை நடந்தபோது சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த இக்பால் என்ற வாலிபர் ஒருவர் ஜமீல் முகமதுடன் தொடர்பு வைத்திருந்ததாக கண்டறியப்பட்டது. இக்பாலை ராஜஸ்தான் போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் தங்கம் கடத்தல் வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இக்பாலும் ஒருவர்.

இக்பால் கைது செய்யப்பட்ட தகவல் ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் இந்த மாத தொடக்கத்தில் ராஜஸ்தான் மாநில போலீசார் சென்னைக்கு வந்து இக்பாலை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

பண உதவி

இக்பால் பணம் வசூலித்து ஐ.எஸ். இயக்கத்துக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அவர் சென்னையைச் சேர்ந்த 4 பேரிடம் பணம் வசூல் செய்ததாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்துவதற்காக இக்பாலை அழைத்துக் கொண்டு ராஜஸ்தான் மாநில போலீசார் நேற்று சென்னை வந்தனர்.

சென்னையில் கோட்டூர்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இக்பாலை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் வைத்து இக்பாலிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் இக்பாலுக்கு பணஉதவி செய்த 4 பேரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.