சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி காரனேசன் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 60). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை மாரநேரி எம்.துரைச்சாமிபுரத்தில் இயங்கி வருகிறது.
நேற்று முன்தினம் மாலையில் பணிகள் முடிந்து தொழிலாளர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர். இரவில் காவலாளி மம்சாபுரத்தை சேர்ந்த ராமர் என்பவர் மட்டும் ஆலையின் அலுவலக அறையில் இருந்துள்ளார். அதிகாலை 3 மணிக்கு திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராமர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது அங்கு ஒரு அறை வெடித்துச்சிதறி தரைமட்டமாகி கிடந்தது. இதுகுறித்து ராமர், ஆலை நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் ஆலை நிர்வாகம் சார்பில் நேற்று காலை மாரநேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலை ஆய்வு தனி தாசில்தார் ஸ்ரீதர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அதிகாரிகளின் முதல் கட்ட விசாரணையில், பட்டாசு தயாரிப்பு அறையில் மின்னல் தாக்கியதில் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் தீப்பற்றி எரிந்து வெடி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாலை நேரத்தில் நடந்த இந்த வெடி விபத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.