வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணமாகும். இந்தாண்டுக்கான முழு சந்திரகிரகணம் இன்று (செவ்வாய்க்கிழமை) நிகழ உள்ளது. நிலா சிவப்பு நிறத்தில் ஒளிர்வதுடன், நீல விளிம்புடன் காட்சியளிக்கும். முழு கிரகணத்தின்போது, சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தை கடந்து வளைந்து செல்கிறது. இதனால் நீல ஒளி சிதறுகிறது. சிவப்பு ஒளி மட்டும் நிலவை அடைகிறது. இதனால் நிலவு அடர் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும். இது 'பிளட் மூன்' எனப்படுகிறது. இன்று நீல விளிம்புடன் சிவப்பு நிலவை பார்க்கலாம்.
நிலவு, பூமி, நிழலின் மையப்பகுதி வழியாக செல்லும் இம்முறை, அது 'அம்பிரா' நிழலின் மேல் விளிம்பை தொட்டு மெதுவாக உரசிச் செல்லும். இதனால், சூரிய ஒளி பூமியின் உயர்ந்த வளிமண்டலத்தில் உள் ஓசோன் படலத்தின் வழியாக செல்லும். அப்போது, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் உறிஞ்சப்படுகிறது. அடர் நீல நிறம் மட்டும் நிலவின் விளிம்பில் மெல்லிய கோடாக தோன்றும்.
சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். தெளிவாக காண தொலைநோக்கிகளை பயன்படுத்தலாம். அசாம், அருணாசலபிரதேசம், மேகாலயாவில் முழுமையாக காண முடியும். டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இறுதிப் பகுதி மட்டும் தெரியும்.
பகுதி நேர கிரகணம் மாலை 3.20 மணிக்கும், முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி, இன்று மாலை 4.45 மணிக்கு தொடங்குகிறது. முழு நிலவாக மாலை 5.10-க்கு காட்சி அளிக்கும். இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் சூரிய மறைவிற்கு பிறகே நிலவு உதிக்கும் என்பதால், கிரகணத்தின் கடைசி சில நிமிடங்களை மட்டுமே பார்க்க முடியும். டெல்லியில் நிலவு மாலை 6.22 மணிக்கு உதிக்கும். மும்பையில் நிலவு மாலை 6.40 மணிக்கு உதிக்கும். மாலை 6.47 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது. எனவே, டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இருப்பவர்கள் 7 முதல் 25 நிமிடங்கள் வரை மட்டுமே இந்த சிவப்பு நிற நிலவை ரசிக்க முடியும். குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கிழக்கு அடிவானத்தைச் சுற்றி ரத்த நிலவின் சிறந்த காட்சிகளை காணமுடியும்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில் தொலைநோக்கி மூலம் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் என்று வானியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.