பென்னாகரம்,
கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த 2 அணைகளில் இருந்து உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கலுக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது. ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்த நிலையில் மெயின்அருவி குளிக்கும் இடம் சேதமானதால் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர். காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.