விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதுபோல் உயிரிலும், மூச்சிலும், எங்கள் உள்ளத்திலும் நிலைத் திருக்ககூடியது விருத்தாசலம் தொகுதி. இந்த முறை நிச்சயமாக விருத்தாசலம் தொகுதியில் வெற்றிபெற்று தொகுதிக்கும். தொகுதி மக்களுக்கும் விஜயகாந்த் விட்டுச்சென்ற எல்லா பணிகளையும் செய்வேன்.
தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர்ந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க முதல் கோரிக்கையாக வைப்பேன். இங்கு இருக்கக்கூடிய மக்கள் வேறு, நாங்கள் வேறு அல்ல. நானும், விஜயகாந்த்தும் போகாத ஊர்கள் இல்லை. 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் வரலாறு திரும்புகிறது.
2006-ல் விஜயகாந்த் வெற்றிபெற்று எப்படி இந்த தொகுதியை முன்மாதிரி தொகுதியாக கொண்டு வந்தாரோ நாங்களும் இந்த முறை கண்டிப்பாக உழைத்து விருத்தாசலத்தை மிகச் சிறந்த தொகுதியாக கொண்டு வருவேன். நிறைய திட்டங்கள் வைத்துள்ளேன்.
தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டுகளாக நினைத்த ஒரு விஷயம். விஜயகாந்த்தும், கருணாநிதியும் இருக்கும் போதே நடக்க வேண்டியது. தாமதமாக இப்போது நடந்துள்ளது. ஏன் இவ்வளவு நாள் இந்தக் கூட்டணி அமையவில்லை என கவலைபடுகிறேன்.. இப்போதான் வழி பிறந்திருக்கிறது. இது மக்கள் விரும்பும் கூட்டணி. மே மாதம் 4-ந் தேதி வரக்கூடிய தேர்தல் முடிவு மிகப்பெரிய வெற்றியைத் தரும். நல்லதையே நினைப்போம், வெற்றியை அடைவோம். இவ்வாறு அவர் கூறினார்.