கோவை
வியாபாரியிடம் ஏலக்காய் வாங்கி ரூ.14 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஏலக்காய் வியாபாரி
சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 48), ஏலக்காய் வியாபாரி. இவருக்கு கோவை ராமநாதபுரம் கொங்கு நகரை சேர்ந்த புருசோத்தமன் என்பவர் அறிமுகம் ஆனார்.
அவர் தானும் ஏலக்காய் வியாபாரம் செய்வதால் நீங்கள் கோவை வந்தால் நாம் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று கூறி உள்ளார். அதை நம்பி கடந்த ஜூன் மாதம் நந்தகுமார் கோவை வந்தார். அப்போது புருசோத்தமனுடன் காஜா உசேன், மருதாசலம், கீதாஞ்சலி, பாரத், ஆனந்த், மோசஸ் மேத்யூ ஆகியோர் இருந்தனர்.
ரூ.14 லட்சம் பொருட்கள்
அவர்கள் 7 பேரும் சேர்ந்து நாங்கள் ஏலக்காய், குறுமிளகு ஆகிய வற்றை கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்து வருவதாக கூறி, நீங்கள் ஏலக்காய், குறுமிளகு அனுப்பினால் அதற்கு உரிய தொகை கொடுப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
அதன்பிறகு சென்னை திரும்பிய நந்தகுமார் ரூ.14 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான ஏலக்காய், குறுமிளகு ஆகியவற்றை அனுப்பி வைத்தார். அதை பெற்றுக்கொண்ட 7 பேரும் அதற்கான பணத்தை உடனடியாக அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். ஆனால் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.
7 பேர் மீது வழக்கு
எனவே நந்தகுமார், அவர்களை பலமுறை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டு உள்ளார். அதற்கு அவர்கள் பணத்தை கொடுத்து விடுவதாக கூறி காலம் கடத்தி வந்தனர். ஆனாலும் பணத்தை கொடுக்க வில்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் புருசோத்தமன், காஜா உசேன், மருதாசலம், கீதாஞ்சலி, பாரத், ஆனந்த், மோசஸ் மேத்யூ ஆகிய 7 பேர் மீது ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.