சென்னை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையிலிருந்து அக்.1ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி நதி அணையிலிருந்து 2020-2021 ஆம் ஆண்டு பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பழைய பாசன நிலங்கள் 5,860 ஏக்கர், புதிய பாசன நிலங்கள் 5,000 ஏக்கர், ஆக மொத்தம் 10 ஆயிரத்து 860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு கோமுகி நதி அணையிலிருந்து அக். 1 ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
மேலும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.