சென்னை
கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவிட்டு உள்ளது.
புயல் பாதிக்க வாய்ப்புள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. வேடிக்கை பார்க்கவோ, செல்ஃபி எடுக்கவோ கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுதப்பட்டு உள்ளது.
கஜா புயல் முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்கள் அச்சமடைய வேண்டாம் என பேரிடர் மேலாண்மை துறை கூறி உள்ளது.
* பாம்பன் துறைமுகம், வானிலை ஆய்வுக்கூடம் உள்ளிட்ட அலுவலகங்களில் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பால் புயல் எச்சரிக்கை குறித்த தகவல்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்
* கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் எங்கும் 936 அவசர கால ஊர்திகள், 41 இரு சக்கர ஊர்திகள் இயக்கப்பட்டு வருகின்றன என தமிழக அரசு கூறி உள்ளது.
மாலை 4.20-க்கு பேட்டி அளித்த சென்னை வானிலைமைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது;-
கஜா புயல் நாகையில் இருந்து 187 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. கரையை நோக்கி 21 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல்கரையை கடக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை என கூறி உள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், செயலியை வெளியிட்டார். இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம் புயல், மழை குறித்த எச்சரிக்கை குறித்த தகவல்களை, மீனவர்கள் அவ்வப்போது அறிந்து கொள்ளலாம்.
இதன் மூலம் கடல் பகுதியில் மீனவர்கள் இருக்கும் இடத்தையும் அறியலாம். சிக்னல் இல்லாத இடத்திலும் இந்த செயலி வேலை செய்யும். செயலி அறிமுக நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இந்த செயலி மீனவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். நடுக்கடலில் மீனவர்கள் யாரும் இல்லை என்றும், மீனவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.