ஆரல்வாய்மொழி:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே சிவகாமிபுரம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் ராமையா (வயது 38). கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி ஆரல்வாய்மொழி குமாரபுரம் சந்திப்பில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் நண்பருடன் வந்த ராமையாவை போலீசார் சோதனை செய்தனர். அதில் 2 கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் சிக்கினார். இதையத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் ராமையா மீது பூதப்பாண்டி, நேசமணிநகர், ராதாபுரம், தக்கலை, நெல்லை பேட்டை, பழவூர், பணகுடி, முன்னீர்பள்ளம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, வழிப்பறி, அடிதடி, கஞ்சா என 29 வழக்குகள் உள்ள பிரபல ரவுடி என்பது தெரியவந்தது. எனவே, ராமையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத், மாவட்ட கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். அதைதொடர்ந்து ராமையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் நாகர்கோவில் சிறையில் இருந்த ராமையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.