போடிப்பட்டி
கணியூர்-கடத்தூர் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு அருகில் தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுவதுடன் பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கும் ஆளாகும் நிலை உள்ளது. குப்பை கொட்டுவதைத் தடுக்கவோ, குப்பைகளை அப்புறப்படுத்தவோ கணியூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், மர்ம நபர்கள் அவ்வப்போது குப்பைகளை தீ வைத்து கொளுத்தி விடுகிறார்கள். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறி விடுகிறது.
குப்பையிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் எரிவதால் மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். மேலும் அதிக உயரம் வரை தீ கொழுந்து விட்டு எரிவதால் பள்ளி வளாகத்திலுள்ள தண்ணீர் தொட்டி, குழாய்கள் மற்றும் மின் கம்பிகள் சேதமடையும் அபாயம் உள்ளது.
எனவே பள்ளி அருகில் குப்பைகள் கொட்டுவதையும் தீ வைத்து கொளுத்துவதையும் தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.