கோவை,
தமிழகத்தில் தொடரும் பாலியல் சம்பவங்களை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் சமீபத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுன் ஆகியோர் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சியில் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அம்மன் அர்ஜுன் ஆகியோரின் உருவ பொம்மைகளுக்கு செருப்பு மாலை அணிவித்து கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இதற்கு காரணமான நபர்களை கைது செய்ய வேண்டும் என்று அதிமுகவினர் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திமுக பேச்சாளர் குட்டப்பன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது தேர்தல் விதிமுறை மீறல், தனிநபரை விமர்சித்தல், பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பொள்ளாச்சி கிளைச் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனர்.