சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் மிகவும் பழமையான மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் தற்போது வவ்வால்கள் குடும்பம், குடும்பமாக தஞ்சம் அடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான ராட்சத வவ்வால்கள் மரங்களின் கிளைகளில் தலைகீழாக தொங்கிக்கொண்டு ஒலிகளை எழுப்பி வருகின்றன. மரங்களில் எங்கு பார்த்தாலும் வவ்வால்களே காணப்படுகின்றன.இதனை அருங்காட்சியகத்துக்கு வரும் பார்வையாளர்கள் பார்த்து செல்கின்றனர். பகல் நேரங்களில் மரங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் வவ்வால்கள் அந்தி சாய்ந்து இருள் சூழ்ந்ததும் இரைகளை தேடி தங்களது பயணத்தை தொடங்குகின்றன. பின்னர் இரை தேடிவிட்டு, மீண்டும் மரங்களுக்கு வந்துவிடுகின்றன.
படையெடுத்து வரும் வவ்வால்கள் பூக்களின் மகரந்த சேர்க்கைக்கும், பழத்தின் விதைகளை வெவ்வேறு இடங்களில் தூவி தாவரத்தின் வளர்ச்சிக்கும் உதவி புரிவதாக வன ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.