சென்னை,
பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், பா.ம.க. தலைவருமான அன்புமணிக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த மோதலை தொடர்ந்து அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், பா.ம.க. அன்புமணி தலைமையில்தான் செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் விதமாகத் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதாக அன்புமணியின் ஆதரவாளரும், பா.ம.க. வழக்கறிஞருமான பாலு விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மூத்த மகன் தமிழ்க்குமரனை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். இந்த நியமன உத்தரவை தமிழ்க்குமரனிடம் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி வழங்கினார். கடந்த 2022-ம் ஆண்டு இளைஞர் சங்க தலைவராக தமிழ்க்குமரன் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது கட்சிக்குள் ஏற்பட்ட மோதல் சூழலை தொடர்ந்து மீண்டும் இந்த நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.