சென்னை
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடன் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதில் பல்வேறு பணிகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதுடன், பல்வேறு பணிகள் ஆய்விலும் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது குறித்து கடந்த ஜனவரி 30 ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநாட்டை எப்போது நடத்தலாம், எந்தெந்த நாடுகளை அழைக்கலாம், முதலீடுகளை ஈர்ப்பதற்கான வழிமுறைகள், தொழில்துறைக்கு தேவையான அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் "உலக முதலீட்டாளர் மாநாட்டை 5 மாதங்களுக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான தேதியை இன்னும் ஒரு வாரத்துக்குள் முதல்வர் அறிவிப்பார் என்றும் மாநாட்டுக்கு என சிறப்பு அதிகாரியும் நியமிக்கப்படுவார்.' ஒரு வாரத்துக்குள் தேதி அறிவிக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்து இருந்தார்
இந்நிலையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் இதற்காக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவிடப்பட்டுள்ளதாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தும் பணிகளுக்காக ஐஏஎஸ் அதிகாரி அருண் ராய் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.