தமிழக செய்திகள்

2 பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு

செம்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் 2 பெண்களிடம் தங்க சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

செம்பட்டி அருகே உள்ள எஸ்.கோடாங்கிபட்டியில் காளியம்மன்-மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்படி சித்தையன்கோட்டை அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த வசந்தா (வயது 60), பாளையங்கோட்டை அருகே உள்ள திம்மிராயபுரத்தை சேர்ந்த ராணி (60) ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது கூட்டநெரிசலை பயன்படுத்தி வசந்தாவிடம் இருந்து 4 பவுன் தங்க சங்கிலியையும், ராணி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியையும் மர்ம நபர்கள் பறித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து செம்பட்டி போலீஸ் நிலையத்தில் வசந்தா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கும்பாபிஷேகத்தில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT