உத்திரமேரூர்,
உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக நடைபெற்ற திருப்பணியின் போது தங்க ஆபரண நகைகள் கிடைத்தன.
முன்னதாக சிதிலமடைந்த நிலையில் உள்ள கோவில் கருவறையின் நுழைவுவாயிலின் முன் உள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளை திருப்பணிக் குழுவினர் அகற்றினர். அப்போது அதன் கீழே துணியால் சுற்றப்பட்ட சிறிய அளவிலான மூட்டை இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது ஏராளமான தங்க ஆபரணங்கள் இருந்தன.
அங்கு கிடைத்த புதையல் தங்கத்தைப் பறிமுதல் செய்ய வருவாய்த்துறையினர் சென்ற போது அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் உத்திரமேரூர் கோவில் திருப்பணியின் போது கிடைத்த தங்க ஆபரண நகைகள் நீண்ட இழுபறிக்கு பின்னர் வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது,
அன்னியர்கள் படையெடுப்பு காரணமாக, சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட நகைகளை இந்த கோவிலின் பல்வேறு பகுதிகளில் புதைத்து வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது கண்டெடுக்கப்பட்ட நகைகள் யாவும் சுவாமி சிலைகளுக்கு திரு ஆபரணங்களாக சாத்தப்படும் நகைகள் என்று நம்பப்படுகிறது.