சென்னை,
தமிழகத்தில் காஞ்சீபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளிலும் மற்றும் திண்டிவனத்தில் உள்ள சரஸ்வதி சட்டக்கல்லூரி ஆகியவற்றில் 5 வருட ஒருங்கிணைந்த எல்.எல்.பி. படிப்பில் சேர 1,411 இடங்கள் உள்ளன.
இந்த படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு தரவரிசை வெளியிடப்பட்டது.
23-ந்தேதி தொடங்குகிறது
இதற்கான கலந்தாய்வு வருகிற 23-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை முடிவடைகிறது. கலந்தாய்வு குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கலந்தாய்வு சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக பழைய கட்டிடத்தில் நடைபெறுகிறது.
23-ந்தேதி பொதுப்பிரிவினருக்கு (குறைந்தது 91.5 கட் ஆப் ) நடைபெறுகிறது. 24-ந்தேதி பழங்குடியினருக்கும் (76.500), அருந்ததியினருக்கும்(79.875) ஆதிதிராவிடர்களுக்கும் (83.875) நடக்கிறது.
கடிதம்
25-ந்தேதி மிகவும் பிற்பட்டோர்களுக்கும் மற்றும் சீர்மரபினர்களுக்கும் (83.125), பிற்பட்டோர் முஸ்லிம்களுக்கும் (81.750) நடைபெற உள்ளது. 26-ந்தேதி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (84.250 ) கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்குரிய கடிதம் அனுப்பப்படும். கலந்தாய்வு கடிதம் கிடைக்காதவர்கள் கட்ஆப் மதிப்பெண் வரும் போது வந்து கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும்.
இந்த தகவலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தலைவர் நாராயண பெருமாள் தெரிவித்துள்ளார்.