கோவை,
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 13-ந்தேதி(இன்று) 37-வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கேவை வந்தார். கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பாரதியார் பல்கலைக்கழகம் சென்ற அவர், மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இரவு 8 மணிக்கு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி, தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் தங்கியுள்ளார். இதையடுத்து பாரதியார் பல்கலைக்கழகத்தை சுற்றி போலீஸ் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 15 டி.எஸ்.பி.க்கள் தலைமையில், 7 ஏ.டி.எஸ்.பி.க்கள், 40 இன்ஸ்பெக்டர்கள், 1200 போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அங்கு வருபவர்களிடம் தீவிர விசாரணை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.