சென்னை,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைகோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்பொழுது, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 ஆகும். தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-வது செயற்கைகோள் ஜிசாட்-29 இதில் பொருத்தப்பட்டு உள்ளது. 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 33-வது ராக்கெட் மற்றும் இந்த ஆண்டு ஏவப்படும் 5-வது ராக்கெட் இதுவாகும்.
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட எரிபொருள், திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் என்ஜின் ஆகிய 3 நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும். இதற்கான இறுதிகட்ட பணியான 26 மணி, 8 நிமிட நேர கவுண்ட் டவுன் நேற்று பகல் 2 மணி 50 நிமிடத்தில் தொடங்கியது. இதன் மூலம் ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்துவதன் மூலம் இஸ்ரோ அடுத்த சாதனைக்கு தயாராகி வருகிறது. கனரக வகையை சேர்ந்த இந்த ராக்கெட் மூலம் சுமார் 10 டன் எடை கொண்ட பொருளை எளிதாக விண்ணுக்கு தூக்கி செல்ல முடியும். ஜிசாட்-29 செயற்கைகோள் 3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்டது.
இந்த செயற்கைகோள் தகவல் தொடர்புத்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். இதற்காக பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜிசாட்-29 அதிநவீன செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் திட்டமிட்டபடி சரியான பாதையில் பயணித்து வருகிறது. ஒவ்வொரு கட்டமாக வெற்றிகரமுடன் கடந்து வருகிறது.