சென்னை,
தமிழகத்தில் கொரொனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு, பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தியுள்ளது. மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் தவிர பிற அனைத்து பணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளின் போது, பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 55 வயதுக்கு மேற்பட்ட நபர்களை 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்ய அனுமதிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சளி, இருமல், மூச்சு பிரச்னைகள் இருக்க கூடிய நபர்களை பணியமர்த்தக் கூடாது என்றும், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களை பணிக்கு பயன்படுத்த கூடாது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வேலையாட்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களை பகிர்ந்துக்கொள்ள கூடாது எனவும் 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.