கோவை,
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே செம்மேடு கிராமத்தில் சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் செம்மேடு கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 48) வீட்டில் ஒரு கிலோ கடமான் கறி சமைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடமான் வேட்டையில் ஈடுபட்டதாக பாலகிருஷ்ணன், துரைசாமி (62), சுந்தர்ராஜ் (51), கேரள மாநிலம் நெடும்பாறையைச் சேர்ந்த பிரகாஷ் (29) ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து வன அதிகாரிகள் கூறியதாவது:-
கேரள எல்லையை ஒட்டிய தமிழக பகுதியான செம்மனாம்பதி அருகே கேரள மாநிலத்தை சேர்ந்த டாக்டர் ஷாஜூவுக்கு சொந்தமான 200 ஏக்கர் தோட்டம் உள்ளது. அவர் தற்போது குவைத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலத்தின் ஒரு பகுதி மாந்தோப்பும், மறுபகுதி காடாகவும் உள்ளது. இங்கு சென்றுதான் இந்த கும்பல் கடமானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி உள்ளனர்.
அதில் சிறிதளவு இறைச்சியை பாலகிருஷ்ணன் வீட்டில் சமைத்துள்ளனர். மீதம் இருந்த இறைச்சியை கேரள மாநிலத்தில் உள்ள சில ஓட்டல்களில் விற்பனை செய்துள்ளனர். இதேபோல் தொடர்ந்து மான்களை வேட்டையாடி திருப்பூரில் உள்ள குறிப்பிட்ட ஒரு சில ஓட்டல்களுக்கு இந்த கும்பல் தொடர்ந்து சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.