தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 17 வயது சிறுவன் பலி!

விபத்தில் படுகாயமடைந்த 17 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள வால சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷின் மகன் அமிர்த சந்தோஷ் (17), அவரது நண்பரான தைலாபுரத்தைச் சேர்ந்த தனசேகர் மகன் கௌதம் (17) ஆகியோர் கடந்த புதன்கிழமை நாசரேத்திலிருந்து தைலாபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருமறையூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே நாசரேத் மார்க்கெட் தெருவைச் சேர்ந்த கிங்ஸ்லி மகன் லாரன்ஸ் (26) மற்றும் அவரது நண்பர் ஸ்டீபன் வந்த இருசக்கர வாகனம், எதிர்பாராத விதமாக அமிர்த சந்தோஷ் ஓட்டி வந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் பலமாக மோதியது.

இந்த விபத்தில் அமிர்த சந்தோஷ், கௌதம், லாரன்ஸ் மற்றும் ஸ்டீபன் ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனர். விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கௌதம், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து நாசரேத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுமுறை காலத்தில் நிகழ்ந்த இந்த விபத்து மற்றும் சிறுவனின் உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.