தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்

வேலூர் உள்பட 5 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியிருக்கும் சூழலில், வரும் நாட்களில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி கடைசியில் இருந்தே உக்கிரம் காட்ட தொடங்கிவிட்டது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பனிகாலத்தினால் ஏற்பட்ட குளிர் வாட்டி வதைத்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது கோடை காலம் வறுத்தெடுக்க தொடங்கியுள்ளது.''எல்நினோ'' தாக்கத்தால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மார்ச் முதல் வாரத்திலேயே தமிழ்நாட்டில் சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தொட ஆரம்பித்துவிட்டது. வழக்கமாக வெயில் உக்கிரம் காட்டும் இடமான வேலூரில்தான் இந்த ஆண்டு 100 டிகிரியை வெயில் முதலில் தொட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது உள் மாவட்டங்களிலும் வெப்பம் வாட்டி வதைக்க ஆரம்பித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 5 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இதில் அதிகபட்சமாக வேலூரில் 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்)வெயில் பதிவானது. அதற்கடுத்தபடியாக மதுரை விமான நிலையத்தில் 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்), கரூரில் 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்), திருச்சியில் 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்), ஈரோட்டில் 100.4 டிகிரி (38 செல்சியஸ்) வெயில் பதிவாகியுள்ளது.