கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று காலை முதலே கடும் வெயில், மக்களை வாட்டி வதைத்தது. இந்த நிலையில் மாலையில் திடீரென வான மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மழை பெய்யத்தொடங்கியது. இதைத் தொடர்ந்து மாலை 6 மணி முதல் மழை பெய்யத் தொடங்கி, சிறிது நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் ஓசூர் பஸ் நிலையம், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள், பாகலூர் ரோடு சர்க்கிள், பாகலூர் ரோடு உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். தொடர்ந்து இரவிலும் பரவலாக மழை பெய்தது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி ஓசூர் பகுதியில் நள்ளிரவில் 12 செ.மீ. அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக திப்பாலம் கிராமத்திற்கும் செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்வதால் ஊரிலிருந்து வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்தனர். மேலும், தொரப்பள்ளி என்ற பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.