ஆலய பெருவிழா
விழுப்புரம் அருகே சென்னகுணம் மாதா நகர் பகுதியில் மிகவும் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுப்பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதுபோல் இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 4-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் காலை நற்கருணை ஆசிர், திருப்பலியும், மாலையில் தேர் பவனியும் நடந்தது.
ஆடம்பர தேர் பவனி
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலியும், இரவில் ஆடம்பர தேர் பவனியும் நடைபெற்றது. இதையொட்டி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், புனித ஆரோக்கிய அன்னை சொரூபம் அமர்த்தப்பட்டு அந்த தேர், சென்னகுணம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. இவ்விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்டனர். நேற்று கொடியிறக்க நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டுக்கான பெருவிழா நிறைவடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.