அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட காணிக்கைபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித காணிக்கை மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 25-ம் ஆண்டு பெருந்திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது. இதையாட்டி கோக்குடி பங்குதந்தை ஸ்டீபன் சிறப்பு திருப்பலியை நடத்தி புனித காணிக்கை அன்னையின் ஆடம்பர தேர் பவனியை தொடங்கி வைத்தார். அப்போது பல்வேறு இசை நிகழ்ச்சிகளும், வாணவேடிக்கைகளும் நடைபெற்றன. இதையடுத்து ஆலய பங்கு தந்தைகளால் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு ஆடம்பர தேர் பவனியுடன் விழா நிறைவடைந்தது. விழாவில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.