சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி அமிர்தவல்லி (வயது 50). இவர் சம்பவத்தன்று தனது பேரன் திவாகரனை (13) வீட்டில் விட்டுவிட்டு வடலூருக்கு பொருட்கள் வாங்க சென்றார். இதை நோட்டமிட்ட சிவப்பு கலர் சட்டை, கருப்பு கலர் பேண்ட் அணிந்து டிப்-டாப்பாக வந்த மர்மநபர் ஒருவர், வீட்டில் இருந்த திவாகரனிடம் உனது பாட்டி எனக்கு பணம் தரவேண்டும் என கூறி, பீரோ சாவியை வாங்கி, அதில் வைக்கப்பட்டிருந்த நகைகளை திருடிச் சென்று விட்டார். நகைகள் திருடிச் சென்றதை அறியாத சிறுவன் வீட்டுக்கு வந்த பாட்டியிடம், மர்மநபர் ஒருவர் பீரோ சாவியை வாங்கியது பற்றி கூறினான். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அமிர்தவல்லி பீரோவை பார்த்தபோது, அதில் இருந்த 3 பவுன் நகைகளை காணவில்லை. அதனை அந்த மர்மநபர் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அமிர்தவல்லி கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை ஏமாற்றி வீடுபுகுந்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.