தமிழக செய்திகள்

திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு

திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், சுயேச்சை வேட்பாளர் திருப்பதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் தங்கம் தென்னரசு சார்பில் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள்கள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து, அந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நான் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே திருச்சுழி தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும். தி.மு.க. வேட்பாளர் தங்கம் தென்னரசு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், தேர்தலை ரத்து செய்ய மறுத்துவிட்டனர். இந்த கோரிக்கை குறித்து மனுதாரர் உரியஆவணங்களுடன் தேர்தல் ஆணையத்தை அணுக வேண்டும். அந்த மனுவை ஆராய்ந்து தேர்தல் ஆணையம் தகுந்த முடிவை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.