தமிழக செய்திகள்

இடுக்கி நிலச்சரிவு: பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவிகள் வழங்கிடுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இடுக்கி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவிகள் வழங்கிடுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்த குடியிருப்பு பகுதியில், கடந்த 7 ந்தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், குடியிருப்பு பகுதியில் இருந்த 20 வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்தன. மேலும் அவற்றில் வசித்த தமிழக தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர். நிலச்சரிவை தொடர்ந்து, கேரள தீயணைப்பு படை வீரர்கள், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் என 600 க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 5 நாட்களாக நடந்த மீட்பு பணியில் 52 பேர் இறந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 6 வது நாளாக மீட்பு பணி தொடர்ந்தது. இந்தநிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 55- ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவிகள் வழங்கிடுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரண இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.