சென்னை,
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, சேலம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18-ந்தேதி வரை மழை நீடிக்கும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அதிகபட்சமாக 12 செ.மீ. மழையும், ஆரணி மற்றும் போளூரில் தலா 8 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், வேலூர் மாவட்டம் ஆம்பூர், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.