தமிழக செய்திகள்

காதலர் தினத்தையொட்டி சென்னையில் காதல் ஜோடிகள் உற்சாகம்

சென்னையில் கடற்கரை, பூங்கா, தியேட்டர்களில் குவிந்த காதல் ஜோடிகள் காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

சென்னை,

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

காதலர் தினத்தை சென்னையில் காதல் ஜோடிகள் நேற்று உற்சாகமாக கொண்டாடினார்கள். பொதுவாக காதல் ஜோடிகள் காதலர் தினத்தில் ரோஜா பூக்களை வழங்கி தங்களுடைய அன்பை பரிமாறிக்கொள்வார்கள்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை மாறி வருகிறது. அதற்கு பதிலாக விலை உயர்ந்த சாக்லெட், பரிசு பொருட்களை வழங்கி காதலர்கள் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

காதலர் தினத்தன்று காதல் ஜோடிகள் பொது இடங்களில் அத்துமீறக்கூடாது என்றும், காதல் ஜோடிகளை அச்சுறுத்தக்கூடாது என்றும் போலீசார் எச்சரித்து இருந்தனர்.

இதற்காக காதல் ஜோடிகள் அதிகம் கூடும் கடற்கரை, பூங்காக்கள், தியேட்டர்கள் ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகம் போடப்பட்டு இருந்ததை காண முடிந்தது.

கடற்கரை, பூங்காக்கள்

சென்னை மெரினா கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் பின்னி பிணைந்தபடி வந்த காதலர்கள், கடற்கரை மணலில் உச்சி வெயிலில் நடந்து சென்று, கடல் அலையில் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை தெளித்து விளையாடி மகிழ்ந்தனர்.

சிலர் வெயிலின் கோரத்தாண்டவத்தையும் தாண்டி கடற்கரை ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த படகு அருகில் அமர்ந்து அன்பு மழையில் நனைந்தபடி இருந்தனர். இதேபோல், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் காதல் ஜோடிகள் முகாமிட்டனர்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள பூங்காக்களிலும் காதல் ஜோடிகள் உலாவினர். குழுவாக வந்த காதல் ஜோடிகள் பூங்காக்களில் கேக் வெட்டி காதலர் தினத்தை கொண்டாடினார்கள். கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்காக்களிலும் நேற்று காதல் ஜோடிகள் வந்திருந்தனர்.

தியேட்டர்கள்...

சில காதலர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் தியேட்டர்களுக்கு படையெடுத்து வந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் பகல் மற்றும் மாலை நேர காட்சிகளில் காதல் ஜோடிகள் கூட்டத்தை அதிகம் காண முடிந்தது.