சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏழை மக்களின் நலனில் அக்கறையின்றி எரிபொருள் விலையை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் தொடர்ந்து உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி தொடங்கிய விலை உயர்வு நீடிக்கிறது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தினமும் நிர்ணயிக்கப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 21 ரூபாயும், டீசல் விலை 21.61 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன.
5-ந் தேதி போராட்டம்
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் அக்டோபர் 5-ந் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 10 மணிக்கு சென்னை உட்பட அனைத்து மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.
இப்போராட்டத்தில் கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும் இடங்கள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.