சென்னை,
ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. முதல்கட்டமாக இந்த வழக்கில் தொழில் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக இந்த வழக்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் ஆகியோரிடம் நேற்று முன்தினம் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
சுமார் 9 மணி நேரம் அவர்களிடம் விசாரணை நடந்தது. முன்னாள் அமைச்சர் ரமணா பற்றி இந்த வழக்கில் பேசப்படவில்லை. அவரது வீட்டில் கூட சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தவில்லை. தற்போது புதிதாக அவரது பெயர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
அமைச்சர் விஜயபாஸ்கரும், முன்னாள் அமைச்சர் ரமணாவும் நேற்று 2-வது நாளாக சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்கள். விஜயபாஸ்கர் காலையிலேயே சி.பி.ஐ. அலுவலகம் வந்துவிட்டார். ரமணா காலை 10 மணிக்கு மேல்தான் வந்தார்.
அவர்கள் இருவரிடமும் மாலைக்கு பிறகும் விசாரணை நீடித்தது. பல்வேறு ஆவணங்களை காட்டியும், சரவணனிடம் விசாரித்த தகவல்கள் அடிப்படையிலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.