திரு.வி.க. நகர்,
சென்னை பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான ரேவதி தங்க மாளிகை, துணிக்கடைகள், பர்னிச்சர் உள்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.
இதில் ரேவதி தங்க மாளிகை என்ற நகை கடையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தங்கமாரியப்பன் என்பவருடைய மகள் தனலட்சுமி(வயது 18) என்ற பெண் வேலை செய்து வந்தார்.
நேற்று மதியம் கடையின் 3-வது மாடியில் உள்ள ஓய்வு அறைக்கு சென்ற தனலட்சுமி, நீண்டநேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
சந்தேகம் அடைந்த சகஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது, இளம்பெண் தனலட்சுமி புடவையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கடை ஊழியர்களே அவரது உடலை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த செம்பியம் போலீஸ் உதவி கமிஷனர் சரவணகுமார், திரு.வி.க.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் நகை கடைக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கடையின் உரிமையாளர் மற்றும் சக ஊழியர்களிடம் போலீசார் விசாரித்தனர். அதில் தூக்கில் பிணமாக தொங்கிய தனலட்சுமி, கடந்த 50 நாட்களுக்கு முன்புதான் இந்த கடையில் வேலைக்கு சேர்ந்து உள்ளார். அவருடைய தந்தை தங்கமாரியப்பன், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அன்று முதல் அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்ததாகவும், இதனால் ஓய்வறைக்கு சென்ற தனலட்சுமி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் போலீசார் வருவதற்கு முன்பாகவே சக ஊழியர்களே தனலட்சுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.