சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் எம்.ஏ.சேவியர் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று இரவு சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இதனைத்தொடர்ந்து எம்.ஏ.சேவியர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர் மன்றம், கட்சி என்ற வகையில் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக சரத்குமாருடன் பயணித்துள்ளேன். சமீப காலமாக அவரது முடிவுகள் கட்சியினருக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது. முதற்கட்டமாக நாங்கள் வெளியேறி இருக்கிறோம். படிப்படியாக சமத்துவ மக்கள் கட்சியினர் ஏராளமானோர் அ.தி.மு.க.வுக்கு வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கமல்ஹாசனுடன், சரத்குமார் கூட்டணி அமைத்ததும், அவரை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்ததுமே சமத்துவ மக்கள் கட்சியினரின் இந்த அதிருப்திக்கு காரணமாக கூறப்படுகிறது.
அதேபோல திருவள்ளூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.