சேலம்,
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலையொட்டி சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2 நாட்கள் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதற்காக இன்று காலை விமானம் மூலம் சேலம் வரும் கமல்ஹாசன் குரங்குசாவடி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்குகிறார். இதையடுத்து மாலை 3.30 மணியளவில் அழகாபுரம் தெய்வீகம் திருமண மண்டபம் அருகில் பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் உரையாற்றுகிறார்.
அதன்பிறகு அஸ்தம்பட்டி, கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் அவர், அங்கு லேக் பகுதியில் மாலை 4.30 மணி அளவில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அதன்பிறகு அங்குள்ள ஒரு ஓட்டலில் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்தாய்வு நடத்துகிறார்.
அதன் தொடர்ச்சியாக குப்பனூர் வழியாக இரவு 7 மணிக்கு அயோத்தியாப்பட்டணம் செல்லும் கமல்ஹாசன் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். பின்னர் ரெட்டிபட்டி பகுதியில் இரவு 8 மணிக்கு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். பிறகு அவர் இரவு ஓட்டலில் தங்குகிறார்.
நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சேலம் 4 ரோடு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்யும் கமல்ஹாசன், அதன்பிறகு அம்மாபேட்டை காமராஜர் காலனியில் உள்ள கொங்கு கல்யாண மண்டபத்தில் நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இதையடுத்து கருவாடு பாலம் பகுதியில் மதியம் 12 மணிக்கு பொதுமக்கள் மத்தியில் பேசும் அவர், குகை, தாதகாப்பட்டி, அன்னதானப்பட்டி, நெத்திமேடு வழியாக கொண்டலாம்பட்டி சந்தை பகுதியில் மதியம் 1 மணிக்கு பிரசாரம் செய்கிறார்.