வாய்மேடு:
வாய்மேடு உடையத்தேவன் காட்டில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. அந்த ரேஷன் கடையில் சேனாதிகாட்டை சேர்ந்த மக்கள் 3 கிலோ மீட்டர் தூரம் வந்து சீனி, அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். உடையத்தேவன் காட்டில் செயல்படும் ரேஷன் கடையை இரண்டாக பிரித்து சேனாதிகாட்டில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு அந்த பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இந்த கோரிக்கையை ஏற்று சேனாதிகாட்டில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா கூட்டுறவு சங்க இயக்குனரும், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான உதயம் முருகையன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். இதில் கூட்டுறவு சங்க தலைவர் நடராஜன், செயலாளர் தமிழ்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் வேதரத்தினம், ஊராட்சி துணைத்தலைவர் மகாலிங்கம், ஊராட்சி செயலாளர் அறிவழகன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கூட்டுறவு சங்க துணைத்தலைவர் செல்லையன் நன்றி கூறினார்.