தமிழக செய்திகள்

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி துறை சோதனை

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.

வேலூர்,

வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்த நேற்றிரவு சென்றனர்.

இதற்கு அங்கிருந்த தி.மு.க. தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அதிகாரிகளுடன் தொடர்ந்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் 4 மணிநேரம் வரை அதிகாரிகள் சோதனை நடத்த முடியாமல் காத்திருந்தனர். இதன்பின் காலை 3 மணியளவில் சோதனை தொடங்கியது. வருமான வரி துறையினருடன், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று வாணியம்பாடியில் உள்ள தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜ் வீட்டிலும் சோதனை நடந்தது. ஆனால் இதில் எதுவும் சிக்கவில்லை.

துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி, பள்ளிகளிலும் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன்படி காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் உள்ள கல்லூரியில் இன்று காலை 8 மணியளவில் சோதனை நடத்தப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.