தமிழக செய்திகள்

பட்டாசு கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு

நாட்டறம்பள்ளி பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி நகரம் மற்றும் நாட்டறம்பள்ளி ஒன்றிய பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு கடைகளில் ஆய்வு செய்ய கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் உத்தரவிட்டார். அதன் பேரில் திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று திரியாலம், கொத்தூர், பச்சூர், வெலக்கல்நத்தம் மற்றும் நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு அனுமதி பெற்று இயங்கி வரும் பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பட்டாசு கடைகளை காற்றோட்டமான மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இடமாற்றம் செய்து நடத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டது. ஆய்வின்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, திரியாலம் கிராம நிர்வாக அலுவலர் அருணா மற்றும் கிராம உதவியாளர்கள் உடன் இருந்தனர்.