கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் பல்வேறு நகரங்களை இணைக்கின்ற ரெயில்களின் பயண நாட்கள் அதிகரிப்பு: பிரதமருக்கு எல்.முருகன் நன்றி

பயனுள்ள அறிவிப்புகளை வழங்கியுள்ள பிரதமருக்கும், ரெயில்வே மந்திரிக்கும் நன்றி என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தின் பல்வேறு நகரங்களை இணைக்கின்ற ரெயில் நிலையங்களுக்கு இடையில் இயக்கப்பட்டு வந்த ரெயில்களின் பயண நாட்களை அதிகரிப்பதற்கான கோரிக்கையானது, தமிழக மக்கள் சார்பில் மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.

அவ்வகையில், திருச்சிராப்பள்ளி-காரைக்குடி, காரைக்குடி-விருதுநகர், காரைக்குடி-திருச்சிராப்பள்ளி மற்றும் விருதுநகர்-காரைக்குடி வழித்தடத்தில், வாரம் ஆறு நாட்கள் இயங்கி வந்த ரெயில்கள் தினசரி இயங்குகின்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னை-போடி நாயக்கனூர் மற்றும் போடி நாயக்கனூர்-சென்னை வழித்தடத்தில் வாரம் மூன்று நாட்கள் இயங்கி வந்த ரெயில்கள், வாரம் ஆறு நாட்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று பயனுள்ள வகையிலான அறிவிப்புகளை வழங்கியுள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT