தமிழக செய்திகள்

சசிகலா பற்றி அவதூறு தகவல்கள் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் மற்றும் நிர்வாகிகள் இரவு சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள். பின்னர் ராஜ் சத்யன் நிருபர்களிடம் கூறியதாவது:–

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா பற்றியும், கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பற்றியும் போலியான தகவல்களையும், அவதூறுகளையும் சிலர் திட்டமிட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். கவர்னர் பெயரில் கூட போலியான அறிக்கையை வெளியிட்டு விட்டனர். இதுபோல சமூக வலைத்தளங்களில் 173 அவதூறு தகவல்களை சேகரித்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் கொடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்திருக்கிறோம். இதுதொடர்பாக 115 புகார்களை கொடுக்க இருக்கிறோம். நாளை (இன்று) இந்த புகார் மனுக்கள் கொடுக்கப்படும்.

அரசியல் ரீதியாக இந்த புகார் மனுக்களை நாங்கள் கொடுக்கவில்லை. குறிப்பிட்ட சில எதிரிகள், குறிப்பிட்ட நிறுவனத்தின் வாயிலாக திட்டமிட்டு அவதூறு தகவல்களை பரப்புகிறார்கள். சைபர் கிரைம் போலீசார் இதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.