தமிழக செய்திகள்

தொப்பூர் கணவாயில்லாரி கவிழ்ந்து டிரைவர்கள் 2 பேர் காயம்

நல்லம்பள்ளி:

ஐதராபாத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்துக்கு பஞ்சு பாரம் ஏற்றி கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம் (வயது 42) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக தர்மபுரி மாவட்டம் ஏலகிரியை சேர்ந்த பெரியசாமி (38) என்பவர் வந்தார்.

இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று முன்தினம் இரவு வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் காயம் அடைந்த இருவரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான லாரியை போலீசார் உதவியோடு, மீட்புக்குழுவினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT