தமிழக செய்திகள்

கொரோனா சிகிச்சைக்காக அரசு, மாநகராட்சி பள்ளிகளை தயார் நிலையில் வைத்திருக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளை சிகிச்சை மையங்களாக மாற்றுவதற்கு தயார் நிலையில் வைத்திருக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன. பல இடங்களில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகள் இல்லாமல் நோயாளிகள் ஆம்புலன்ஸ் வேன்களில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் மற்றும் மாநகராட்சி மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் அதிக வகுப்பறைகள் மற்றும் இடவசதிகள் உள்ளதால், அவற்றை கொரோனா சிகிச்சை பயன்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 60 மாநகராட்சி பள்ளிகளில் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.