தமிழக செய்திகள்

கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கடையநல்லூரில் கல்லூரிகளுக்கு இடையே நடந்த கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கடையநல்லூர்:

கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் குமரன் தலைமை தாங்கினார். கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர்ரஹ்மான், கடையநல்லூர் யூனியன் துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ், அரசு கலை அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் அணி ராக்லேண்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் பிரேமா வரவேற்றார். பேராசிரியர் பால் மகேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பேராசிரியர் குரு சித்திர பாரதி போட்டியை ஒருங்கிணைத்தார்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின. போட்டியில் ஆண்கள் பிரிவில் புளியங்குடி மனோ கல்லூரி முதலிடத்தையும், நாகம்பட்டி மனோ கல்லூரி 2-வது இடத்தையும், சுரண்டை அரசு கல்லூரி 3-வது இடத்தையும், கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி 4-வது இடத்தையும் பிடித்தது. இவர்களுக்கு மா.செல்லத்துரை வெற்றி கோப்பைகளை வழங்கினார்.

பெண்கள் பிரிவில் ஆலங்குளம் சி.எஸ்.ஐ.ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி முதலிடத்தையும், குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி 2-வது இடத்தையும், சாத்தான்குளம் அரசு கல்லூரி 3-வது இடத்தையும், கடையநல்லூர் அரசு கல்லூரி 4-வது இடத்தையும் பிடித்தது. இவர்களுக்கு கடையநல்லூர் யூனியன் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.