கடத்தூர்
ஈரோடு மாவட்டம் கோபியில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான பா.அப்துல்சமது நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற யார் மூலமாவது வாய்ப்பு கிடைக்காதா என துடித்துக்கொண்டு உள்ளனர். கடந்த தேர்தலில் ரஜினிகாந்தை அரசியலுக்கு இழுத்து அவர் தோள் மீது ஏறி தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர முயற்சி செய்தனர். ஆனால் அவர் முழுமையாக அரசியலில் ஈடுபட முடியாது என ஒதுங்கி விட்டார்.
தற்போது மீண்டும் கவர்னர் மூலமாக ரஜினிகாந்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர் மூலமாக ஒரு சில தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதா என முயற்சி நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் இது போன்ற சக்திகளுக்கு துணை போக கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கட்சியின் மாநில மாவட்ட, நகர, நிர்வாகிகள் உடன் இருந்தனர்.