தமிழக செய்திகள்

சட்டவிரோத மது பார்கள் மீதான புகாரை விசாரித்து நடவடிக்கை: மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

கரூரில் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்களை மூட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Lingavel Murugan M

கரூர் மாவட்டம் வயலூர் பகுதியைச் சேர்ந்த சூரியபிரகாஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கரூர் மாவட்டத்தில் 89 டாஸ்மாக் கடைகளுடன் பார் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் 45 கடைகளின் பார்களுக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டு உள்ளது. மற்றவை சட்டவிரோதமாக செயல்படுகின்றன.

கடந்த ஆண்டில் 44 டாஸ்மாக் கடைகளுடன் பார் நடத்த ஏலம் விடுவது தொடர்பான அறிவிப்பு வெளியானது. இதில் ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மற்ற 43 டாஸ்மாக் கடைகளிலும் சட்டவிரோதமாக பார்கள் செயல்படுகின்றன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்களை மூடவும், பார்களுக்கான ஏலம் நடத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாமல் பொதுவாக கூறப்பட்டு உள்ளது. எந்தெந்த டாஸ்மாக் கடைகளுடன் சட்டவிரோதமாக பார்கள் நடத்தப்படுகின்றன என்ற விவரம் தாக்கல் செய்யப்படவில்லை.

இதுதொடர்பாக உரிய ஆதாரங்களுடன் புகார் மனுவை மனுதாரர் அளித்தால் அதனை டாஸ்மாக் நிறுவன செயலாளர், மாவட்ட மேலாளர், கரூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை